Wednesday, August 30, 2023

தமிழக தலைவர்கள் : அறிஞர் அண்ணா

சி.என். அண்ணாதுரை (Conjeevaram Natarajan Annadurai) அவர்கள் செப்டம்பர் 15,1909 - இல் காஞ்சிபுரத்தில் ஒரு ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை  நடராஜனார், தாய் பங்காரு அம்மாள்.

  • இவர் தனது சிற்றன்னையான இராசாமணி அம்மையாரிடம் வளர்ந்தார்.
  • இவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பயின்றார்.
  • இவர் 1927 இல் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராகப் பணியாற்றினார்.
  • இவர் 1930 இல் இராணி அம்மையாரை மணந்தார்.
  • இவர் முதன்முதலாக எழுதிய 'பெண்கள் சமத்துவம்' என்னும்கட்டுரையானது மாசிலாமணி முதலியார் வெளியிட்டு வந்த 'தமிழரசு' என்னும் இதழில் 1931-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  • இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி. (ஹானர்ஸ்) பட்டமும், பிறகு எம். (பொருளாதாரம் மற்றும் அரசியல்) பட்டமும் பெற்றார்.
  • சென்னையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் ஆசிரியராக இவர் பணியாற்றினார்.

பொது வாழ்க்கை:

பேராசிரியர் 'வரதராஜனும்', நீதிக்கட்சியின் 'வெங்கடசாமியும்' முக்கியமான மூன்று கருத்துகளை அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தி அவர் பொதுவாழ்வில் ஈடுபட காரணமாக இருந்தனர்

அந்தக் கருத்துகள்:

  • சமூக நீதி
  • பிராமணரல்லாதார் முன்னேற்றம்
  • அரசியல் கட்சி மூலம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவது

இவர் சாதி ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் நீதிக்கட்சியில் 1934 - இல் முறைப்படி சேர்ந்தார். இதற்கு அரசியல் இரட்டையர்களான'சண்டே அப்சர்வர்' இதழ் ஆசிரியர் பி. பாலசுப்பிரமணியனும், நீதிக்கட்சியின் 'ஜஸ்டிஸ்' இதழ் ஆசிரியர் டி.வி. நாதனும் உடனடிக் காரணமாக இருந்தனர்.


அண்ணா அவர்களின் முதல் சிறுகதையானகொக்கரக்கோ', 1934 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியானது.

இவர் திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் முதல்முறையாக பெரியாரை சந்தித்தார்.

இவர் 1936 இல் சென்னை மாநகராட்சிக்குப் பெத்துநாயக்கன்பேட்டைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

பாசுதேவ் நடத்தி வந்த பாலபாரதி என்ற இதழை நடத்தும் பொறுப்பு 1936 ஆம்ஆண்டு அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

அண்ணா அவர்களின் முதற்கவிதை 'காங்கிரசு ஊழல்' என்ற தலைப்பில் 1937 ஆம் ஆண்டு 'விடுதலை' ஏட்டில் வெளியானது.

1937 இல் திருச்சி மாவட்டம் துறையூரில் நடந்த சுயமரியாதை மாநாட்டிற்கு அண்ணா தலைமை தாங்கினார்.

'காஞ்சி' மணிமொழியார் வெளியிட்டு வந்த நவயுகம் இதழின் துணை ஆசிரியராக இவர் 1937- இல் பணியாற்றினார்.

அண்ணா ஈரோடு சென்று பெரியார் நடத்தி வந்த குடி அரசு மற்றும் விடுதலை இதழ்களின் முழுநேர துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இந்தி பாடத்தை கட்டாயமாக்கினார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. 1938 இல் நடைபெற்ற முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு, அண்ணா முதல் முறையாகச் சிறை சென்றார். (நான்கு மாத சிறைத் தண்டனை).

1938 ஆம் ஆண்டு முதல்பரதன்' என்ற பெயரில் பல்வேறு தலைவர்களுக்கு விடுதலை ஏடு வாயிலாக பகிரங்கக் கடிதங்கள் எழுதி வெளியிட்டார். மேலும் சௌமியன், ஒற்றன், சம்மட்டி, நக்கீரன், சமதர்மன், வீனஸ், வீரன், ஆணி, குறிப்போன் போன்ற பல புனைப் பெயர்களில் அண்ணா கட்டுரைகளையும், கதைகளையும், விமர்சனங்களையும், ஓரங்க நாடகங்களையும் எழுதினார்.

1939 ஆம் ஆண்டு, அண்ணாவின் முதல் குறும்புதினமான 'கோமளத்தின் கோபம்' குடி அரசு இதழில் வெளியானது.

இவர் 1939 இல் நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். அப்பொழுது அதன் தலைவர் பெரியார்.

காங்கிரஸ் தலைவராக இருந்த டாக்டர் வரதராஜூலு நாயுடு அண்ணாவை 'நீதிக்கட்சியின் மூளை' என்று வர்ணித்தார்.

1940 ஆம் ஆண்டு, 'வீங்கிய உதடு' என்கிற இவரின் முதல் புதினம் குடி அரசு இதழில் வெளியானது.

திராவிட நாடு கொள்கை:

 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 -ஆம் நாள் திருவாரூரில் நீதிக்கட்சியின் மாநிலமாநாடு கூடிற்று. இம்மாநாட்டில் "திராவிட நாடு திராவிடருக்கே" என்னும் கொள்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை முன்மொழிந்தவர்: 'சண்டே அப்சர்வர்' இதழ் ஆசிரியர் பாலசுப்பிரமணியம்.

வழிமொழிந்தவர்கள்: சி.பாசுதேவ், அறிஞர் அண்ணா.

அண்ணா 1942 -இல் தனது தோழர்களான டி.பி.எஸ். பொன்னப்பா, அங்கமுத்து, கணேசன் ஆகியோரின் ஆதரவுடன் திராவிட நாடு என்னும் இதழை காஞ்சிபுரத்தில் துவக்கினார்.

இந்த இதழ் வெளிவர பக்க பலமாக இருந்தவர்கள்: இராம. அரங்கண்ணல், தில்லை வில்லாளன்.

1943 இல் இவரின் முதல் நாடகமான 'சந்திரோதயம்' திருவத்திபுரம் லட்சுமி விலாஸ் அரங்கில் நடத்தப்பட்டது.

இயக்க அரசியல்:

1944 ஆகஸ்டு 27 ஆம் நாள், சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16 ஆவது மாநில  மாநாட்டில் அண்ணா அவர்களால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத்தீர்மானம்:

  • ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தரப்பட்ட சர், ராவ் பகதூர், திவான் பகதூர், ராவ்சாகேப் போன்ற கவுரவப் பட்டங்களைத் துறக்க வேண்டும்.
  • உள்ளாட்சி மன்றத் தலைவர், கவுரவ மாஜிஸ்ட்ரேட் பதவிகளிலிருந்து விலக வேண்டும்.
  • பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் போட்டுக் கொள்ளக்கூடாது.
  • தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) என்ற பெயரை மாற்றித் திராவிடர் கழகம் என்ற பெயரிடப்பட வேண்டும்.

மேற்கண்ட தீர்மானம் ஆனது பெரும் விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. இது அண்ணாதுரைத் தீர்மானம் என அழைக்கப்பட்டது. இதன்படி நீதிக்கட்சியானது திராவிடர் கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு அதன் தலைவராகப் பெரியாரும், பொதுச் செயலாளராக அண்ணாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

படைப்புகள்:

நாடகங்கள்

ஓர் இரவு, வேலைக்காரி, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம், நீதிதேவன் மயக்கம், காதல் ஜோதி, பாவையின் பயணம், குமாஸ்தாவின் பெண், கொலைகாரியின் குறிப்புகள்.

திரைப்படங்கள் : (கதை திரைக்கதை)

நல்லத்தம்பி, வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்கவாசல்

புதினங்கள்

ரங்கோன் ராதா, கலிங்காராணி, பார்வதி பி.., தசாவதாரம்,

என் வாழ்வு, குமரிக்கோட்டம், வண்டிக்காரன் மகன், கடைசிக் கனவு, மக்கள் தீர்ப்பு, வெள்ளை மாளிகையில்

இதர நூல்கள் (கட்டுரைகள் ) 

ரோமபுரி ராணிகள், கம்பரசம், பெரிய புராணப் புதையல், பணத்தோட்டம், மாஜி கடவுள்கள்.

தேர்தல் அரசியல்:

டி.எம். பார்த்தசாரதி தொடங்கிய மாலைமணி இதழில் 1949 ஆம் ஆண்டு இவர் ஆசிரியராக பணியாற்றினார்.

பெரியாருக்கும், அண்ணாவுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின.

1949 ஜூலை 9 ஆம் தேதி பெரியார் மணியம்மையை மணந்தார். இதனால் அண்ணாவும் அவருடைய ஆதரவாளர்களான .வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, என்.வி. நடராசன் போன்ற முன்னணித் தலைவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று 1949 செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை - பாரிமுனையில் உள்ள பவழக்காரத் தெரு 7 எண் இல்லத்தில் ('திருவொற்றியூர்' சண்முகத்தின் இல்லம்) 'குடந்தை' கே.கே. நீலமேகம் தலைமையில் கூடி, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்தனர்.

அன்று மாலையே சென்னை ராபின்சன் பூங்கா (ராயபுரம்) மைதானத்தில் கழகத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. அக்கூட்டத்துக்குத் 'பெத்தம்பாளையம்' பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

அப்பொழுது தி.மு.. வின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டவை:

  • சமுதாயச் சீர்திருத்தம்
  • பொருளாதாரத்தில் சமதர்மம்
  • அரசியலில் வடவரின் (வட இந்தியர்) ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெறுதல்.

அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும், அவரது கட்சியின் பண்பாடாகவும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் வார்த்தைகளை முன்மொழிந்தார்.

ஆரிய மாயை (1943 - இல் வெளியானது) என்ற நூலை எழுதியதற்காக அண்ணாவிற்கு, 1950 -இல் திருச்சி நீதிமன்றம் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது.

காங்கிரஸ் அரசினால் தடைசெய்யப்பட்ட அண்ணாவின் நூல்கள்

  • ஆரிய மாயை,
  • இலட்சிய வரலாறு.

1951 -இல் சென்னையில் என்.வி. நடராஜன் தலைமையில் நடைபெற்ற தி.மு.. வின் முதலாவது மாநில மாநாட்டில், அடுத்த ஆண்டு (1952) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது; மாநாட்டில் இறுதியில் பேசிய அண்ணா "கண்ணீர்த் துளிகளே! என் கண்ணின் மணிகளே" என்ற உணர்ச்சிமிக்க உரையொன்றை ஆற்றினார்.

1953 இல் இவர் புகழ்பெற்ற "மும்முனைப் போராட்டம்" என்பதை அறிவிக்கிறார்.

  • குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம் (தலைமை: .வெ.கி. சம்பத்)
  • ரயில் நிறுத்தல் போராட்டம்
  • கல்லக்குடி பெயர் மாற்றப் போராட்டம் (தலைமை: மு. கருணாநிதி)

1953 - இல் தமது கட்சிக்காக (திமுக) இவர் நம்நாடு என்னும் இதழை வெளியிட்டார்.

1956 மே மாதம் திருச்சியில் நடைபெற்ற தி.மு.. வின் இரண்டாவது மாநில மாநாட்டில், அடுத்த ஆண்டு (1957) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவது என்று தி.மு.. முடிவு செய்தது.

அதன்படி, 1957 தேர்தலில் தி.மு.. போட்டியிட்டு, 15 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்.

1957ஆம் ஆண்டு இவர் தனது கருத்துகள் உலகமெங்கும் பரவ வேண்டும் என்பதற்காக Home Land என்ற ஆங்கில வார இதழைத் தொடங்கினார். அண்ணா வெளியிட்ட மற்றொரு ஆங்கில இதழ் Home Rule (1966).

1962 பிப்ரவரியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.. போட்டியிட்டு, 50 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைத்தாலும் அண்ணா சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். அதன்பின் மார்ச்சு 20 ஆம் நாள், அண்ணா மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962 இல் ஏற்பட்ட சீனப் போரின் காரணமாகப் பிரிவினைவாதம் அல்லது தனிநாடு கேட்பது ஆகியவை 1963-இல் அரசியலமைப்பு ரீதியாகத் (16வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்) தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக திராவிட நாடு கொள்கையைக் கைவிடுவது என்ற முடிவினை அண்ணா மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக 1963 இல் திராவிட நாடு இதழ் நிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக 'காஞ்சி' என்னும் இதழை தனது கருத்துக் களமாக அமைத்துக் கொண்டார்.

அதன்பின் 1963 இல் இந்தியை ஆட்சி மொழியாக்கும் அரசியல் சட்ட திருத்தத்தை எதிர்த்து தி.மு.. ஆனது அரசியலமைப்பின் பகுதி XVII யை தீ இட்டு எரிக்கும் போராட்டத்தை அறிவித்தது. (பகுதி XVII ஆனது அலுவல் மொழிப் பற்றியது). இந்த பகுதியானது இந்தியை தமிழர்களின் மீது கட்டாயப்படுத்தி திணிக்கிறது என்று கருதினார் அண்ணா.

இந்த போராட்டமானது 1963 நவம்பர் 17 ஆம் தேதி துவக்கப்படும் முன் தி.மு.. தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தி.மு.. தலைவர் அண்ணா கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சட்ட எரிப்புப் போராட்டம் தி.மு. வின் செல்வாக்கை மேலும் அதிகரித்தது.

1965 இல் இந்தியானது ஆட்சி மொழியாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மாநிலத்தை ஆண்ட காங்கிரஸின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. அண்ணா தலைமையிலான தி.மு.. விற்கு செல்வாக்கு உயரத் தொடங்கியது.

ஆட்சி அமைத்தல்:

1967 பிப்ரவரியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், இராஜாஜியின் சுதந்திராக் கட்சி, மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி, முஸ்லிம் லீக், .பொ. சிவஞானத்தின்தமிழரசுக் கழகம்", ஆதித்தனாரின் "நாம் தமிழர்" முதலிய கட்சிகளுடன் தி.மு.. கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இக்கூட்டணி ஐக்கிய முன்னணி (United Front) என்று அழைக்கப்பட்டது.

சென்னை மாநிலச் சட்டப் பேரவையில் 138 இடங்களையும், மக்களவைக்குத் தி.மு.. போட்டியிட்ட 25 இடங்களையும் கைப்பற்றி தி.மு.. மாபெரும் வெற்றியைப் பெற்றது.

1967 தேர்தலில் தி.மு.. வெற்றி பெற்றதற்கான முக்கியமான காரணங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றும் பக்தவத்சலத்தின் காலத்தில் நிலவிய அரிசிப் பற்றாக்குறை ஆகியவை ஆகும்.

தி.மு.. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அண்ணாவை சட்டசபை தி.மு. தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

பின்னர், சென்னையிலிருந்து திருச்சி சென்ற அண்ணா, பெரியாரைச் சந்தித்து அவருடைய வாழ்த்துகளைப் பெற்றார். அது முதல் பெரியார் "தி.மு.. ஆட்சியை ஒரு பகுத்தறிவு ஆட்சி" என்று கூறி, தன்னுடைய உயிர் உள்ளவரை அதற்கு ஆதரவாக இருந்தார்.

1967 மார்ச்சு 6 ஆம் நாள் அண்ணா தலைமையில், தி.மு.. ஆட்சி அமைத்தது. இவர் முதலமைச்சர் ஆனார். இவர் அந்த தேர்தலின் பொழுது சட்டமன்றத்திற்கு போட்டியிடவில்லை ஆதலால் 1967, ஏப்ரல் 22- ஆம் நாள் சென்னை மாநகராட்சி தொகுதிக்கெனத் தமிழ்நாடு சட்ட மேலவையில் காலியாக இருந்த ஒரு இடத்திற்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அண்ணா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அண்ணாவின் அமைச்சரவையில் இரா. நெடுஞ்செழியன் (கல்வி), ரா. நெடுஞ்செழியன் (கல்வி), மு. கருணாநிதி (பொதுப்பணி), கே.. மதியழகன் (26001621), .கோவிந்தசாமி (விவசாயம்), சத்தியவாணிமுத்து (ஆதி திராவிடர் நலம்), எஸ். மாதவன் (சட்டம்), எஸ்.ஜே. சாதிக் பாட்சா (மக்கள் நல்வாழ்வுத் துறை), எம். முத்துச்சாமி (உள்ளாட்சி) ஆகியோர் இடம் பெற்றனர்.

சாதனைகள்:

இவரது ஆட்சி சமயச் சார்பற்றது. மதம் அரசியலோடு மதச்சார்பற்ற கலக்கக்கூடாது என்பதே ஆட்சியின் அடையாளம். அதனால் தான் அண்ணா அரசாங்க அலுவலகங்களில் கடவுள் படங்களை வைக்கக்கூடாது என்று ஆணை பிறப்பித்தார். இவர்

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்ற கொள்கையை முன்மொழிந்தவர் ஆவார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி கொடுப்பதே தனது குறிக்கோள் என்று வாக்குறுதி கொடுத்தார். அந்த லட்சியத்தை நிறைவேற்றும் பொருட்டு 1967 மே 15 ஆம் தேதி துவக்க நடவடிக்கையாக கோவையிலும், சென்னையிலும் "படி அரிசிஅதாவது ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

1925 -லிருந்து பெரியார் நடத்திவந்த சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாகக் கூடிய சட்டம் ஒன்றை, 1967-இல் முதலமைச்சர் அண்ணா கொண்டு வந்தார்.

அந்தக் காலத்தில் பிராமணர்களின் தலைமையில்தான் திருமணங்கள் நடைபெறும். அவர்கள் சமஸ்கிருத மந்திரங்களை ஓதித் திருமணங்களை நடத்துவார்கள். இதனை கடுமையாக எதிர்த்த பெரியார் இதற்கு மாற்றாக சுய மரியாதைத் திருமணங்களை நடத்தி வந்தார். இதன்படி தாலி அணியாமல் வேத மந்திரங்கள் ஓதாமல் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொள்ளும் வழிமுறையை பெரியார் அறிமுகப்படுத்தினார்.

இதற்காக "இந்து திருமணங்கள் திருத்த மசோதா" (Hindu Marriages Amendment Bill) வை சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தினார் அண்ணா. மேற்கண்ட சட்ட மசோதா சட்டமாக நிறைவேறிய பின்னர் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கட்குத் தங்கப் பதக்கம் வழங்கும் திட்டம் அறிமுகமானது.

விதவைகளை மறுமணம் செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டது.

1967 ஜூலை மாதம் அண்ணாவினால் புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள செக்ரடேரியேட் ஆனது 'தலைமைச் செயலகம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அண்ணா அவர்கள் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தினார். (இப்பெயர் மாற்றத்திற்காக 1957 இல் சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). அத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்றமானது சரத்து 3 (Article 3) யை திருத்தம் செய்து அதற்கு ஒப்புதல் அளித்தது. அதன்பின் 1969 ஜனவரி 14 ஆம் தேதி சென்னை மாகாணத்தின் பெயர் சட்டப்படியாக தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த கவர்ன்மென்ட் ஆப் மெட்ராஸ், சத்யமேவ ஜயதே போன்ற பிற மொழிச் சொற்களை நீக்கி தமிழக அரசு" "வாய்மையே வெல்லும்" என்கிற தமிழ்ச் சொற்களை அண்ணா பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

சீரணி என்ற 1300 தொண்டர்களைக் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆட்சித் துறையில் தமிழ் அறிமுகம் செய்யப்பட்டது. கூவம் நதியைத் சீரமைக்க ஒரு திட்டம் அறிமுகம் ஆனது.

புன்செய் நிலங்களின் மீதான நிலவரியை ரத்து செய்தார்.

இவர் நடைமுறையில் இருந்த இலவச துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றார். அதன்படி மாத வருவாய் ரூ.1500 க்குக் குறைவாக உள்ள பெற்றோரின் பிள்ளைகள் இலவச 'பட்டப்படிப்பிற்கு முந்தைய படிப்பு' (Pre - University Course (or) PUC) பெற வழி வகுக்கப்பட்டது.

அண்ணா அவரது பொருளாதாரக் கொள்கைக்கு விஞ்ஞான சோஷலிசம் (Scientific Socialism) என்று பெயரிட்டார். "சோஷலிசம் என்பது சேமநலம் மட்டுமல்ல; சேமத்துக்கு உறுதி தருவது மட்டுமல்ல, சமத்துவத்தை உண்டாக்கப் பாடுபடுவது சோஷலிசம்என்று வரையறுத்தார். இக்கொள்கையின் முதல் கட்ட நடவடிக்கையாக பேருந்துப் போக்குவரத்து நாட்டுடைமையாக்கப்பட்டது. அப்போதெல்லாம் தமிழகத்தில் தனியார் பேருந்துகளின் ஆதிக்கம்தான் இருந்தது. இந்த நிலையை மாற்றி, நாட்டிலேயே முதன்முறையாகத் தி.மு.. ஆட்சிக் காலத்தில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

சென்னையில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்கான வீராணம் குடிநீர் திட்டத்தை உருவாக்கினார். கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இது பின்னாளில் செயல்படுத்தப்பட்டது.

முதலமைச்சர் நலநிதி (Chief Minister's Welfare Fund) துவக்கப்பட்டது.

1968 இல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை இவர் சிறப்பாக நடத்தினார்.

1963 ஆட்சி மொழிகள் சட்டம் (Official Languages Act, 1963) திருத்தங்கள் செய்யப்பட்டு 1968 ஜனவரி 8 ஆம் தேதி திருத்தச் சட்டமாக நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாட்டு மாணவர்கள் இத்தீர்மானத்துக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா அளித்த உறுதிமொழியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. அந்த உறுதிமொழியின் விளைவே இருமொழிக்கொள்கை. (அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே).

சிறப்புகள்:

சென்னை சிந்தனையாளர் மன்றத்தில் நடைபெற்ற விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் அண்ணாவிற்கு "அறிஞர்என்னும் பட்டத்தைச் சூட்டினார். அது முதற்கொண்டு அவர், “அறிஞர் அண்ணா" என்றே தமிழக மக்களால் அழைக்கப் பெற்றார். மேலும் பேரறிஞர் அண்ணா என்றும் அழைக்கப்படுகிறார்.

தம்முடைய நேர்மைத் திறத்தாலும் கொள்கை உரத்தாலும் "தென்னாட்டுக் காந்தி" என்ற பெரும் சிறப்பினையும் பெற்றார்.

1968 இல் அமெரிக்காவிலுள்ளயேல்” பல்கலைக்கழகம் இவருக்கு "சப்பெல்லோ சிப்' (Chubb Fellowshipஎனப்படும் உயரிய அறிஞருக்குரிய பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது. இதனைப் பெற்ற அமெரிக்கர் அல்லாத முதல் நபர் அண்ணாவே ஆவார்.

அண்ணாவின் தலைமைப்பண்பு, நிர்வாக நேர்மை, அரசியல் பண்பாடு ஆகியவற்றை சிறப்பிக்கும் வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1968 ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் (Doctor of Literature) அளித்து அண்ணாவைப் பாராட்டியது.

அண்ணாதுரையின் புதிய புரட்சிகரமான படைப்புகளைக் கூர்ந்து கவனித்து வந்த கல்கி கிருஷ்ணமூர்த்தி அவரை ஜெர்மனியின் நாடக மேதை இப்சனோடு (Ibsen) ஒப்பிட்டு எழுதினார். மேலும் அண்ணாவை இவர் "தென்னாட்டு பெர்னாட்ஷா” என்றும் அழைத்தார்.

"அண்ணா உயர் பண்புகளின் உறைவிடம்", என்று முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி பாராட்டினார்.

'ஒரு கவிஞனின் படைப்புச் சக்தி: ஒரு சிறந்த மேதையின் காந்த சக்தி. ஓர் அரசியல்வாதியின் மதி நுட்பம் சாதாரண மக்களாலும் நேசிக்கப்பட்டும், நேசித்தும் வாழும் எளிமை; அடக்கம்; அன்பு அனைத்தும் ஒரே மனிதனில் இணைந்திருப்பது அபூர்வ மனிதர் அண்ணா" என்று வெசுலி நியூபிகின் என்ற அயல்நாட்டு அறிஞர் கூறினார்.

அண்ணா மிகச் சிறந்த சொற்பொழிவாளர், இவரின் மேடைப் பேச்சு தனித்துவமானது.

இறுதிகாலம்:

1968 செப்டம்பர் மாதம் அண்ணாவுக்குப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா அனுப்பப்பட்டு அங்குள்ள நியூயார்க் நினைவு மருத்துவமனையில் (New York Memorial Hospital) அனுமதிக்கப்பட்டார். டாக்டர். தியோடர் மில்லர் (Dr. Theodore Miller) சிகிச்சை அளித்தார். அறுவை சிகிச்சை முடிந்து சென்னைக்கு திரும்பினார். இவர் 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி (பொங்கல் தினம்) நடைப்பெற்ற கலைவானர்என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதுதான் இவரின் கடைசி பொது நிகழ்ச்சி ஆகும்.

அண்ணா 1969 பிப்ரவரி 3- ஆம் தேதி காலமானார்.

இவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவருடைய உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய்ப்பட்டது. அங்கே இவரின் நினைவைப் போற்றும் வகையில் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.